×

புதுவையில் சம்பளம் வழங்காததால் அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி போராட்டம்-7 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி : புதுவையில் சம்பளம் வழங்காததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விஷம் அருந்திய 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். புதுவையில் அமுதசுரபி மளிகை கடை, பார்களில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், கடந்த மாத இறுதியில் அமுதசுரபி பார்களில் சிலவற்றை கிஸ்தி கட்டாததை காரணம் காட்டி கலால்துறை சீல்வைத்தது. இதனால் மேலும் பல ஊழியர்கள் வேலையிழந்தனர். இதனிடையே நிலுவை சம்பளத்தை கேட்டும், தங்களுக்கு மாற்று வேலை வழங்கக்கோரியும் அமுதசுரபி ஊழியர்கள் தொடர்ந்து 32வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமுதசுரபி தலைமை அங்காடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலர் தாங்கள் கையில் வைத்திருந்த பினாயில் உள்ளிட்ட விஷ பாட்டிலை எடுத்து அதை அடுத்தடுத்து குடித்தனர். உடனே அங்கிருந்த சக ஊழியர்கள் தடுத்து கூச்சலிடவே, விரைந்து வந்த பெரியகடை எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார் உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து விஷம் அருந்திய குமரன், சிவஞானம், மணிமாறன், அய்யனார், ஆறுமுகம் உள்ளிட்ட 7ஊழியர்களை அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு உட்புற நோயாளிகளாக சேர்க்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

இதனிடையே அங்கேயே சக ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்துவரும் நிலையில், தகவல் கிடைத்து வந்த அமுதசுரபி அதிகாரிகள், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனிடையே முன்னாள் முதல்வர் நாராயணசாமி , வைத்தியநாதன் எம்எல்ஏ, உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் அரசு மருத்துவமனைக்கு சென்று ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் அரசு உடனே இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. ஏற்கனவே காந்தி வீதி அமுதசுரபி தலைமை அங்காடி நுழைவு வாயில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் பெண்கள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கைதாகி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post புதுவையில் சம்பளம் வழங்காததால் அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி போராட்டம்-7 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Amudasurabi ,Puducherry ,Dinakaran ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி