- கருட சேவா
- பிரமோத்சவம்
- ஸ்ரீ வைத்தியா வீரராகவ பெருமாள் கோயில்
- திருவள்ளூர்
- பிரம்மோத்சவம்
- ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
- ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரமோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று கருட சேவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன் படி நேற்று காலை கருட சேவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோபுர தரிசனமும், மாலை 5.30 மணிக்கு திருவீதி புறப்பாடும், 7.30 மணிக்கு ஹனுமந்த வாஹனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
29ம் தேதி காலை 5 மணிக்கு சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும், 30ம் தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை 7 மணிக்கு யாளி வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதே போல் வருகின்ற மே மாதம் 1ம் தேதி காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும் மாலை 5 மணிக்கு வெள்ளி சப்பரமும், இரவு 7 மணிக்கு யானை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
2ம் தேதி காலை 4.45 மணிக்கு தேரில் பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு தேர் புறப்பாடும், இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு பெருமாள் எழுந்தருளுதலும் நடைபெறுகிறது. பிறகு 3ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும் 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 4ம் தேதி விடியற்காலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான நிகழ்ச்சியும், 5ம் தேதி காலை 9 மணிக்கு த்வாதசாராதனமும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
The post ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை appeared first on Dinakaran.