×

காஞ்சிபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வடக்கு வாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை அதன் முன்னோர்கள் உருவாக்கி இதிலிருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை கோயில் செலவுகளுக்கும், மீதத்தை கட்டளை செலவுகளுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இச்சொத்தானது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்றும் எழுதி வைத்துள்ளனர். இதனடிப்படையில் இச்சொத்தானது அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இந்த அமைப்பின் கீழ் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்து வந்தன. குறிப்பாக காஞ்சிபுரம் அருகே வேலூரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலமும் இருந்துள்ளது. இந்த அமைப்பின் வாரிசுரிமை பரம்பரை அறங்காவலராக சி.வி.சந்திரசேகரன் என்பவரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கொல்லா சிங்கண்ண செட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டியது மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டியது என சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததாகவும்,சொத்துக்களை அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்க முயற்சித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து சந்திரசேகரை அறநிலையத்துறை இணை ஆணையர் பதவி நீக்கம் செய்ததுடன் கட்டளையின் தக்காராக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமியை நியமித்தும் உத்தரவிட்டார். இதன்பேரில் ப.முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர்(பொறுப்பு)லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் செயல் அலுவலர்கள் வேலரசு,கார்த்திகேயன்,ஆய்வாளர் பிரித்திகா,தனி வட்டாட்சியர் வசந்தி,கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன்,சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டளை அலுவலகத்துக்கு சென்று அதை மீட்டு தக்காராக ப.முத்துலட்சுமி நியமனம் பற்றிய தகவலை கதவில் முன்பக்கத்தில் ஒட்டினார்கள்.

இதன் மூலம் கட்டளை இடத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் கட்டளை சொத்துக்கள் சம்பந்தமாக ஏதேனும் விபரங்கள் தேவைப்படுவோர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ள ப.முத்துலட்சுமியை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

The post காஞ்சிபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Saditya ,Kangipuram ,Kanchipuram ,Kamadashi Amman Temple ,Hindu Religious Foundation ,Amman Temple ,Kanzipuram ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு