×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடிகள் கிராம செயலகங்கள் கட்டும் பணி

*கலெக்டர் நேரில் ஆய்வு *விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், பல்வேறு ஊராட்சிகளில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம செயலக கட்டிடங்கள் கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம், லாலாப்பேட்டை, மருதம்பாக்கம், கல்மேல்குப்பம், கல்புதூர், பல்லேரி, கொண்டக்குப்பம், வாணாபாடி, செட்டித்தாங்கல், வன்னிவேடு ஆகிய கிராம ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, முகுந்தராயபுரம் ஊராட்சியில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணி, புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, லாலாப்பேட்டை ஊராட்சியில் புதிய கட்டிடம் கட்டும் பணி, மருதம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சி செயலக அலுவலக கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, பல்லேரி, கொண்டகுப்பம் ஊராட்சிகளில், ஊராட்சி செயலக புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிலுவையில் இருந்து வருவதை பார்வையிட்ட கலெக்டர் வளர்மதி, பணிகள் ஏன் தொடங்காமல் உள்ளது? என கேட்டறிந்து மே 10ம் தேதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கல்புதூர் ஊராட்சியில் ₹19 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட பணி, ₹10.19 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை பார்வையிட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கல்மேல்குப்பம் ஊராட்சியில் ₹30.35 லட்சம் மதிப்பில் நடந்து வரும் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட பணி, வாணாபாடி ஊராட்சியில் ₹11.76 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணி, செட்டித்தாங்கல் ஊராட்சியில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட பணி, வன்னிவேடு ஊராட்சியில் ₹90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பணிகள் அனைத்தையும் கண்காணித்து விரைவாகவும், தரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய பொறியாளர் முனுசாமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் உடனிருந்தனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடிகள் கிராம செயலகங்கள் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Ankanwadis Village Secretaries ,Ranipetta District ,Ranipetta ,Ranippet District Schools ,Ankanwadis Village Secretaries Building ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!