புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி முரளிதர் குறித்து டிவிட்டர் பக்கத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் குருமூர்த்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தமது பதிவையும் நீக்கி இருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரத்தையும் குருமூர்த்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் மேற்கண்ட வழக்கு விசாரணை நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது.
அப்போது நீதிபதி தல்வந்த்சிங், பார் அசோசியேஷன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் குருமூர்த்தி இரு வரியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பிரச்சனை முடிந்துவிடும் என வலியுறுத்தி உத்தரவிட்டார். ஆனால் குருமூர்த்தி தரப்பிலோ, மன்னிப்பு கேட்ட பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன. இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டோம். புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் நீதிபதி முரளிதர் தற்போது ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். கடந்த ஆண்டு நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் தமது பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post நீதிபதி குறித்து அவதூறு ஆடிட்டர் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.