×

திருவாரூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா முறைகேடு 2 டி.ஆர்.ஓ, தாசில்தார் உட்பட 5 பேர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருவாரூர்: திருவாரூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தொடர்பான முறைகேட்டில் 2 டிஆர்ஓ, தாசில்தார், விஏஓ, உதவியாளர் ஆகிய 5 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், நகைகள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் கடந்த 2019ல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு வருவாய்த்துறையினர் மூலம் இலவச பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம், பின்னர் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக எடுக்கப்பட்டடு, ரூ.1.50 கோடி வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி ரூ.1.50 கோடி அரசு பணம் முறைகேடாக கைமாறியது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்றுமுன்தினம் புகார் சென்றது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார், தேசிய நெடுஞ்சாலை நிலமெடுக்கும் பணி டிஆர்ஓ மணிமேகலை, 2019ல் திருவாரூர் ஆர்டிஓவாக பணியாற்றி, பின்னர் டிஆர்ஓ பதவி உயர்வில் விழுப்புரம் அரசு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் முத்துமீனாட்சி மற்றும் அதே ஆண்டில் திருவாரூர் தாசில்தாராக பணியாற்றி வந்த ராஜன்பாபு, அடியக்கமங்கலம் விஏஓ துர்கா ராணி, கிராம உதவியாளர் கார்த்திக் ஆகிய 5பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 6.45 மணியளவில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் இணைந்து ஒரே நேரத்தில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் ஜி.ஆர்.டி நகரில் வசித்து வரும் டிஆர்ஓ முத்துமீனாட்சி, விளமல் பகுதியில் வசித்து வரும் விஏஓ துர்கா ராணி, ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் கிராம உதவியாளர் கார்த்திக் ஆகிய 3 பேர் வீடுகள் மற்றும் தஞ்சாவூரில் உள்ள டிஆர்ஓ மணிமேகலை வீடு மற்றும் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தாசில்தார் ராஜன்பாபு வீடு என மொத்தம் 5 இடங்களில் பிற்பகல் 1 மணி வரை இந்த சோதனை நடந்தது. இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சோதனை முடிவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகள், ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

The post திருவாரூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா முறைகேடு 2 டி.ஆர்.ஓ, தாசில்தார் உட்பட 5 பேர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Tiruvarur ,
× RELATED திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!!