
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகள் தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விதிகளை அறிவித்துள்ள நிலையில், இச்சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது. இந்த சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஆன் லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டுகளை முறைப்படுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது. தற்போது, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட, ட்ரீம் 11 விளையாட்டு உள்ளது. நாடு முழுவதும் விளையாடப்படும் அதை எப்படி தடை செய்ய முடியும். சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்றார்.
தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சூதாட்டம் குறித்த இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரமில்லை. மாநில அரசு சட்டம், தடை மட்டும் விதிக்க முடியுமே தவிர, இணையதளத்தில் இருந்து நீக்க முடியாது, அதை ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும். திறமையை விட அதிர்ஷ்டம் மேலோங்கி இருக்கும் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தளங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிக்கின்றன. அப்பாவி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மனுதாரர்களுக்கு பாதுகாப்பும் வழங்கக் கூடாது என்றார்.
மற்றொரு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், மக்கள் பணத்தை பறிக்க ஆன்லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. தற்போதைய நிலையில் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது. பங்குச் சந்தை இழப்பால் ஏற்படும் மரணங்களை காரணம் காட்டி, தடை விதிக்க முடியுமா? இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பல லட்சம் ரூபாய் புழங்கும் நிறுவனங்களை மூட வேண்டி இருக்கும் என்றார்.
விசாரணையின் போது, சமூக தீங்காக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளால் மரணங்கள் நிகழ்வதாலும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாலும், அவற்றை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள் நலன்தான் மிக முக்கியம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, 6 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். சமூக தீங்காக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளால் மரணங்கள் நிகழ்வதாலும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாலும், அவற்றை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது.
The post ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு appeared first on Dinakaran.