சென்னை: மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதையடுத்து 2022ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி மதுரையில், கலைஞர் நூலகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வந்தது. தற்போது, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து வரும் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து நிதியமைச்சர் ஆற்றிய உரையில் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரை தாங்கி வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும். எனவே, இந்த நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என அழைக்கப்படும் என அரசு அறிவிக்கை செய்து ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரூ.114 கோடியில் மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.