×

வீட்டில் திருடியதை கண்டுபிடித்ததால் ஆத்திரம்; சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தையே கொல்ல முயற்சி: 15 வயது சிறுவன் கைது

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளாம்பாடியை சேர்ந்தவர் சீனிவாசன்(39), கூலித்தொழிலாளி. இவரது மனைவி குஷ்பூ(35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20ம்தேதி காலை தம்பதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து அன்று மாலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டின் அருகே வந்து சென்றதாக கூறினர். இதைத்தொடர்ந்து சீனிவாசன், சிறுவனிடம் கேட்க அவனது வீட்டுக்கு சென்றார். அங்கு சிறுவன் இல்லை. அவனது அண்ணன் இருந்தான். அவனிடம் கேட்டபோது, எனது தம்பி கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வருவதில்லை என கூறியுள்ளான்.

இந்நிலையில், சீனிவாசன் தம்பதியினர் நேற்று முன்தினம் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு செய்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். அன்று மதியம் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசனின் தங்கை, அண்ணனின் வீட்டுக்கு வந்து அவரது குழந்தைகளுக்கு சாப்பாடு பறிமாற முயன்றார். அப்போது சாம்பாரில் ஒருவிதமான வாடை வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் சம்பாரை வெளியே கொட்டியுள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த வாத்துக்கள் சாம்பாரை சாப்பிட்டது. இதில் சிறிது நேரத்தில் அந்த வாத்துகள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தது. இதை பார்த்த 15 வயது சிறுவன் அங்கிருந்து ஓடினான். இதுகுறித்து லட்சுமி, தனது அண்ணன் சீனிவாசனிடம் கூறினார்.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில், சீனிவாசன் வீட்டில் திருடிய ₹15 ஆயிரத்தில் செல்போன் வாங்கியதும், இந்த திருட்டை கண்டுபிடித்தது மட்டுமின்றி அவனது அண்ணனை தாக்கியதால் சாம்பாரில் விஷத்தை கலந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டில் திருடியதை கண்டுபிடித்ததால் ஆத்திரம்; சாம்பாரில் விஷம் கலந்து குடும்பத்தையே கொல்ல முயற்சி: 15 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Rage ,Artgad ,Srinivasan ,Clampadi ,Ranipet district ,Khushboo ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது