×

தொடர் மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண துணை மின்நிலையம், உயர் மின்கோபுரம் அமைக்க வேண்டும்-கொடைக்கானல் மேல்மலை கிராமமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை பகுதியில் நிலவும் தொடர் மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண துணை மின்நிலையம் அல்லது உயர் மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் விநியோக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, போளூர், கூக்கால், குண்டுப்பட்டி, பழம்புத்தூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு நேற்று முன்தினம் மதியம் மின்சாரம் தடைபட்டது.

இதுபற்றி அளித்த தகவலின் பேரில் மின்வாரியத்தினர், எதனால் மின்சாரம் தடைபட்டது என மலைப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். கொடைக்கானல் துணை மின்நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம், பள்ளங்கி- அடிசரை வழியாக சுமார் 2 கிமீ தொலைவிற்கு மலைப்பகுதியின் நடுவே உள்ள பூம்பாறை வந்து சேர்கிறது. இதில் அடிசரையில் இருந்து பூம்பாறை வரும் மின்வயர் ஒன்று மின் அழுத்தம் அல்லது வேறு ஏதோ குறைபாடு காரணமாக அறுந்து விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மின்வாரியத்தினர், அந்த மின்வயரை சீர்செய்ய முயற்சித்தனர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் பணியை தொடர முடியாமல் மீண்டும் நேற்று புதிய மின்வயரை மாற்றி சீர்செய்யும் பணியினை மேற்கொண்டனர். மின்வாரிய ஊழியர்களுடன், பூம்பாறை கிராமமக்களும் இணைந்து 2 கிமீ தொலைவில் உள்ள மின்வயரை இழுத்து கட்டி மின் இணைப்பு சீராவதற்கு உதவி செய்தனர். தொடர்ந்து பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மின்விநியோகம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் முருகேசனிடம் கேட்ட போது கூறியதாவது, ‘கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது குறித்து புகார் வந்ததையடுத்து ஊழியர்களுடன் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தோம். மிகவும் கடினமான இப்பணியை முடித்து 24 மணிநேரத்தில் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
துணை மின் நிலையம் அமைப்பதே நிரந்தர தீர்வுெகாடைக்கானல் மேல்மலை பகுதிகளுக்கு இதுபோல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் மின்வயர்கள் வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவதனால் தான். பலத்த காற்றோ அல்லது மழை பெய்தாலோ மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக பூம்பாறை மலை கிராம பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். அல்லது கொடைக்கானல் துணை மின்நிலையத்திலிருந்து மேல்மலை கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய மின் பாதைகளில் உயர் மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் விநியோகிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தொடர் மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதுபற்றி மின்வாரியத்தினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்மலை கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர் மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண துணை மின்நிலையம், உயர் மின்கோபுரம் அமைக்க வேண்டும்-கொடைக்கானல் மேல்மலை கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Melmalai ,Kodaikanal ,Kodaikanal Melammalai ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...