×

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வனத்திற்குள் அத்துமீறும் பயணிகள்

*வனத்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்துவார்களா?

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி – தெப்பக்காடு இடையே வனப்பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் அத்துமீறி செல்வதால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை வனத்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தி தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 321 சதுர கிமீ பரப்பளவு உள்மண்டல பகுதியாகும். இப்பகுதியில் தான் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள், பறவையினங்கள் உள்ளிட்டவை உள்ளன. மேலும் உள் மண்டலம் வழியாக தான் தான் மசினகுடி – தெப்பக்காடு இடையே சாலை மற்றும் தொரப்பள்ளி முதல் கக்கனல்லா வரையிலான சாலையும் செல்கிறது. இதனால் இச்சாலை வழியாக பயணிக்கும் போது யானை, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகளை அடிக்கடி காண முடியும். சில சமயங்களில் அரிதாக புலியை பார்க்க முடியும்.

வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இச்சாலைகளில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இறங்க கூடாது. காப்பு காடுகளுக்குள் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்வதுடன், ஆங்காங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொள்வது வாடிக்கை.

இந்நிலையில் சமீபகாலமாக மசினகுடி – தெப்பகாடு மற்றும் தொரப்பள்ளி முதல் கக்கனல்லா சோதனை சாவடி வரையிலான சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலையில் உலா வருவது, வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் நடப்பதை காண முடிகிறது. ஆனால் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதனை கண்டு கொள்ளாமல் உள்ளது. வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபாயமும் நீடிக்கிறது.

மசினகுடி – தெப்பக்காடு இடையே உள்மண்டல பகுதியில் வரும் நிலையில் மிகவும் பாதுகாப்பட்ட வனப்பகுதியாகும். இந்நத சாலையில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட 1 லிட்டர் பிளாஸ்டிக் காலி பாட்டில்கள் மற்றும் இதர குப்பைகள் கிடப்பதை காண முடிகிறது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வனத்திற்குள் நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post முதுமலை புலிகள் காப்பக பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வனத்திற்குள் அத்துமீறும் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Masinagudi ,Theppakadu ,Dinakaran ,
× RELATED முதுமலை முகாமில் குழந்தையை போல் உறங்கிய தாயை பிரிந்த குட்டி யானை