×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : எடப்பாடியை சேர்ந்த ஜோதிடர், சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு எடுத்துள்ளது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார், கனகராஜை கடைசியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு எடுத்துள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி கனகராஜிடம் கடந்த வாரம் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. இதில் ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜுடன் டிஎஸ்பிஐ கனகராஜ் 100க்கும் மேற்பட்ட முறை செல்போனில் பேசியது தெரியவந்தது.

இந்த நிலையில், ஓட்டுநர் கனகராஜுடன் தொடர்பில் இருந்த ஜோதிடரிடம் விசாரணை நடைபெறவுள்ளது. கடைசியாக கனகராஜ் சந்தித்த போது, அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறியதாக தகவல்கள் கூறப்படுகிறது.ஜோதிடரை சந்தித்துவிட்டு திரும்பிய அன்று இரவே விபத்தில் உயிரிழந்தார் கனகராஜ். இதையடுத்து எடப்பாடியைச் சேர்ந்த ஜோதிடர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி மே முதல் வாரம் முதல் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பின்னணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அவரது கொடநாடு பங்களாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து விட்டு, அங்கிருந்து விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனது. அப்போது, கொள்ளையர்களை தடுக்க முயன்ற மற்றொரு காவலாளி கிருஷ்ண தபா காயமடைந்தார்.இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் தனது மனைவியுடன் காரில் செல்லும்போது சாலை விபத்தில் இறந்தார். அதைதொடர்ந்து கேரள கூலிப்படை தலைவன் சயான் தலைமையில் 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை நடத்தினர். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மேலும், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. அப்போதுதான், கொலையில் அதிமுக முக்கிய பிரமுர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்கு விசாரணை, அதிரடியாக கோவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொள்ளை, கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அதிமுகவின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

அவருக்கு மிகவும் பாதுகாப்பு அதிகாரி மற்றும் நம்பிக்கைக்குரியவராக டிஎஸ்பி கனகராஜ் இருந்தார். அவருக்கும் கொலை வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல், தலைமையிலான போலீசார் சென்னை மந்தைவெளியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, வழக்கு தொடர்பாகவும், கொள்ளை நடந்தபோது வைத்திருந்த வங்கி கணக்கு விபரங்களை பெற்று, டிஎஸ்பி கனகராஜூடம் விசாரணை நடத்தினர். கனகராஜ் தற்போது ஆவடி ஆயுதப்படை உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : எடப்பாடியை சேர்ந்த ஜோதிடர், சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Godanadu ,Edappadi ,Samman ,Sasigala ,Chennai ,Salem District Edappadi ,Kodanadu ,Edapadi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்