திண்டுக்கல்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திண்டுக்கல்லுக்கு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 12 மணிநேர வேலைநேரத்தை முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். இதனை உடனடியாக சீரமைத்து அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது பல இடங்களில் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை பார்க்கின்றனர். அதற்கான ஊதியத்தை கொடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அதிகமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 12 மணிநேர வேலையில் தொழிலாளர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் பாதிப்புகள் ஏற்பட்டால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த வேண்டியது தான். நியாயமான கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திற்கு கூட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கலைஞர் காலத்திலேயே விமான நிலையம் கொண்டு வர வேண்டியது. அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளால் தான் நிறுத்தப்பட்டது. இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படுவது சகஜம். இதை எல்லாம் தாண்டி முதல்வர் விரைவாக 12 மணிநேர வேலைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post 12 மணிநேர வேலையை அமல்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.