×

காலியாக கிடந்த சேரில் தொண்டர்கள் அமர கெஞ்சிய நிர்வாகிகள் ஓபிஎஸ் மாநாட்டில் கொலை முயற்சி? கத்தியுடன் சுற்றியவரால் பரபரப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருச்சி: திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்றுமுன்தினம் இரவு ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும்விழா மாநாடு நடந்தது. அப்போது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சேர்ந்த கருத்தபாண்டி(57) என்பவர் மேடை அருகே பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்தார். அவர் யாரையும் கொலை செய்யும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, அவரை பொன்மலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்ட கருத்தபாண்டி மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் பாதுகாப்புக்காக கத்தியுடன் வந்ததாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். இவர் மீது புகார் எதுவும் கொடுக்காததால் போலீசார் அவரிடம் எழுதி வாங்கி கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மாநாட்டிற்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாததால் பெரும்பாலான சேர்கள் காலியாக கிடந்தன. இதை மேடையில் இருந்து பார்த்த நிர்வாகிகள் சேர்கள் காலியாக கிடக்கிறது, வந்து உட்காருங்கள் என கெஞ்சினர். அப்போது மேடை அருகே நின்ற நிர்வாகிகளே, ஆட்களே இல்லாமல் எப்படி வந்து உட்கார முடியும் என கமெண்ட் அடித்தனர். மற்றொரு நிர்வாகி, பத்திரிகை காரங்க கூட்டம் இல்லைன்னு படம் பிடிச்சு போட்டுருவாங்க என்று திரும்ப திரும்ப கூறினார். இப்படி நிர்வாகிகள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* மாநாட்டுக்கு வந்த வேன் மோதி ஒருவர் பலி; 19 பேர் படுகாயம்
திருச்சியில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் மாநாட்டுக்கு வந்துவிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த 19 பேர், வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மதுரை அருகே வெள்ளரிப்பட்டி நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்த வேன், திடீரென டோல்கேட் அருகே அறிவிப்பு கம்பத்தின் மீது மோதி, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 19 பேரும் காயத்துடன் மீட்கப்பட்டனர். இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமங்கலம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (73). இவர், நேற்று முன்தினம் திருமங்கலம் சென்று விட்டு ஊருக்கு செல்ல ராயபாளையம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கி, சாலையை கடக்க முயன்றபோது ஓபிஎஸ் அணி மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பிய வேன் மோதி இறந்தார்.

The post காலியாக கிடந்த சேரில் தொண்டர்கள் அமர கெஞ்சிய நிர்வாகிகள் ஓபிஎஸ் மாநாட்டில் கொலை முயற்சி? கத்தியுடன் சுற்றியவரால் பரபரப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : OPS conference ,Tiruchi ,OPS ,Trichy Ponmalai G corner ,Virudhunagar ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு