×

உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ராமானுஜர் ஜெயந்தி 25.4.2023

“அனைத்து உலக மக்களும், இறைவனுடைய பேரருளைப் பெற்று, நன்றாக வாழ வேண்டும். இணக்கமாக வாழ வேண்டும், என்ற நல்ல எண்ணத்துடன் ஒரு மகான் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் என்கிற திவ்ய தலத்தில் அவதரித்தார். அவர்தான் ஸ்ரீராமானுஜர்.120 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார். அவர் திருவடி படாத ஊரே பாரத நாட்டில் இல்லை. இந்தியா முழுவதும், பாத யாத்திரையாக பயணம் செய்து, பக்தி மார்க்கத்தையும் அதன் நிறைவு நிலையான “சரணாகதி மார்க்கத்தையும்” பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.

மனிதகுலம் உய்வதற்கான உயர்ந்த நெறியை மிக எளிய வழியில் காட்டினார். சுவாமி விவேகானந்தர் ஒரு முறை மிக அழுத்தமாகச் சொன்னார்; “நம்முடைய சமய மரபில் ஸ்ரீராமானுஜரைப் போல ஒரு உத்தம புருஷரைப் பார்க்கவே முடியாது. ராமானுஜரின் கருணையானது அண்டத்தைப்போல் விரிந்து பரந்து இருக்கிறது. இந்த உயிர்களிடத்தில்தான் அவருக்கு எத்தனை அன்பு?” உண்மைதான். சாஸ்திரங்களை பிழிந்து, அதனுடைய சாரத்தை எடுத்து, ‘‘இறைவனை அடைய இந்த எளிய வழியைப் பின்பற்றினால் போதும்’’ என்று இனிமையாக எடுத்துரைத்த மாண்பு அவருடையது.

கி.பி.1017-ஆம் ஆண்டு பிங்கள வருடம், சித்திரை மாதம், வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமியன்று, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ராமானுஜர். ஆரம்பத்தில் தன் தந்தையிடம் வேதங்கள் கற்றார். தன்னுடைய பதினாறு வயதில் தஞ்சமாம்பாள் என்பவரை மணந்தார். திருமணமான சில மாதங்களில் தந்தையை இழந்தார். பின் கல்வி கற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு குடும்பத்துடன் குடியேறினார்.

பகவத் ராமானுஜரின் பல்வேறு பெருமையை அறிந்திருந்த ஆளவந்தார், தம் காலத்துக்குப்பின் வைணவ சமயத்தை, கட்டுக்குலையாமல் காப்பாற்ற, ராமானுஜரை வைணவ சமயத் தலைவராக நியமிக்க எண்ணினார். தம்முடைய இறுதிக்காலத்தை உணர்ந்த ஆளவந்தார், தன்னுடைய சீடர்களில் ஒருவரான ஸ்ரீபெரியநம்பிகளை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவர நியமனம் செய்தார். ஆனால், ராமானுஜர் பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் வந்து சேர்வதற்கு முன்னமே ஆளவந்தார் மறைந்தார்.

இறுதிச் சடங்கிற்காகக் கொள்ளிடக் கரையில் வைக்கப்பட்டிருந்த பூதஉடலை (சரமத் திருமேனி) மட்டுமே பகவத் ராமானுஜரால் பார்க்க முடிந்தது. ராமானுஜர் கதறி அழுதார். ஆறுதலுக்காக திருவரங்கத்தைச் சேவிக்கலாம் என்று மற்றவர்கள் அழைத்தபொழுது, தான் விரும்பிய தன்னுடைய ஆசாரியனை உயிருள்ளபோதே சேவிக்கவிடாத திருவரங்கனை சேவிக்க விரும்பவில்லை என்று வெறுத்துப் பேசினார்.

அப்பொழுது அவர் ஸ்ரீஆளவந்தாரின் பூதவுடலை உற்றுக் கவனித்தார். ஸ்ரீஆளவந்தாரின் வலது கையிலுள்ள மூன்று விரல்கள் ஏனோ மடங்கியிருந்தன. அதை வேறு யாரும் கவனிக்கவில்லை. அந்த மடங்கிய விரல்கள் ஏதோ சில செய்திகளை குறிப்பாக தமக்கு உணர்த்துவதாக எண்ணிய ராமானுஜர், பெரிய நம்பிகளிடம் கேட்டார். ஆளவந்தாரின் மனதில் ஏதேனும், நினைத்து, நிறைவேற்ற முடியாத ஆசைகள் இருந்ததா? என்று விசாரித்தார். அப்பொழுது அவருடைய பிரதான சீடர்கள் சொன்னார்கள்.

‘‘ஆம், ஆளவந்தாரிடம் மூன்று ஆசைகள் இருந்தன.’’
அவைகள் என்னென்ன என்று ராமானுஜர் கேட்டார்.

1) வேதாந்த விஷயமான ஸ்ரீவியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுதல்.

2) சாமவேத சாரமான ஸ்ரீநம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை (வியாக்கியானம்) எழுதுதல்.

3) நமக்கு வேதங்கள் தந்த ஸ்ரீபராசரர் மற்றும் ஸ்ரீவியாசர் ஆகியோரின் பெயர்களை சரியான முறையில் நினைவுகூர்வது.

ஸ்ரீராமானுஜர் அந்த இடத்திலேயே, ‘‘எனது மானசீக குருவின் மூன்று ஆசைகளையும் நிறைவேற்றுவேன்’’ என்று சங்கல்பம் செய்தார். எல்லோரும் வியக்கும் படியாக ஆளவந்தாரின் மடங்கியிருந்த மூன்று விரல்களும் நிமிர்ந்தன. அந்த ஆசைகளைத் தன் வாழ்நாளில் நிறைவேற்றினார் பகவத் ராமானுஜர். பிரம்ம சூத்திரத்திற்கு மிக அற்புதமாக விளக்க உரை எழுதினார். அது “ஸ்ரீபாஷ்யம்’’ என்று புகழ் பெற்றது. ராமானுஜருக்கு பாஷ்யக்காரர் என்ற திருநாமம் அமைந்தது. திருவாய்மொழிக்கு தம்முடைய சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரை கொண்டு ஆறாயிரப்படி என்கின்ற விளக்கவுரையை எழுத வைத்தார்.

மூன்றாவதாக தம்முடைய வலதுகரமாக விளங்கிய சீடர் கூரத் தாழ்வானின் குமாரர்களுக்கு பராசரபட்டர், “வேத வியாச பட்டர்’’ என்ற பெயர்களைச் சூட்டி, வைணவத் தரிசனம் பரவும்படி அவர்களை நியமித்தார். இப்படி ஆளவந்தாரின் மூன்று ஆசைகளையும் தம்முடைய வாழ்நாளில் ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். ஆயினும் அன்றைய தினம் அவர் திருவரங்கம் செல்லாமலேயே மிகுந்த வருத்தத்துடன் காஞ்சிபுரம் திரும்பினார். காஞ்சிபுரத்தில் ஒரு மடத்தை நிறுவி வைணவ தரிசனம் வளர்த்து வந்தார்.

இவருடைய தங்கை மகன் தாசரதி என்ற முதலியாண்டான், சிற்றன்னையின் மகன் கோவிந்தன் மற்றும் கூரத்தாழ்வான் ஆகியோர் மிக முக்கிய சீடர்கள் ஆனார்கள். இதற்கிடையில் வைணவத்திற்கு தகுதியான தலைமை வேண்டும் என்று எண்ணிய ஆளவந்தாரின் சீடர்கள், எப்படியாவது ராமானுஜரை திருவரங்கம் அழைத்து வரவேண்டும் என்று நினைத்து, ஸ்ரீஆளவந்தாரின் குமாரரும், அவருடைய சீடருமான “திருவரங்கப் பெருமாள் அரையர்’’ என்கின்ற ஆசாரியரை காஞ்சிபுரம் அனுப்பி வைத்தனர்.

திருவரங்கப் பெருமாள் அரையர் இசை பாடுவதிலும், நாட்டியத்திலும் வல்லவர். இசையில் ஆர்வம் மிக்க காஞ்சி வரதராஜ பெருமாளை இசைபாடி மயக்கி, ராமானுஜரை அனுப்பும் படியாக பிரார்த்திக்க, வரதனும் இசைந்தார். வரதனிடம் அனுமதி பெற்று பகவத் ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ஆளவந்தாரின் சீடர்கள், ராமானுஜர் தலைமை வகித்து, வைணவ தரிசனத்தை வளர்ப்பதற்காக, சேரன் மடம் என்கின்ற மடத்திற்கு ஜீயராக (சிம்மாசனாதிபதியாக) நியமித்தார்கள்.

ராமானுஜர் ஆளவந்தாரின் அன்புக்குரிய ஐந்து சீடர்களை தமக்கு குருவாகக் கொண்டார். ஸ்ரீபெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் திருமந்திர உபதேசம் பெற்றார். தமது தாய்மாமனும் ஆளவந்தாரின் சீடரான ஸ்ரீபெரியதிருமலை நம்பிகளிடம் ராமாயணத்தின் நுண்பொருளை ஒரு வருடகாலம் தெரிந்து கொண்டார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் 18 முறை நடந்து வைணவத்தின் ரகசியங்களை தெரிந்துகொண்டார். அவரிடம் பெற்ற மந்திரத்தை, “ஆசை உடையவர்கள் எல்லாம் வாருங்கள்” என்று எல்லோருக்கும் வாரி வழங்கிய வள்ளல் ஆனார். பகவத் ராமானுஜரின் சுயநலமில்லா பெருந்தன்மையை எண்ணிய திருக்கோட்டியூர் நம்பிகள், பகவானைவிட கருணை மிக்கவர் ராமானுஜர் என்ற பொருளில், “எம்பெருமானாரே” என்று அழைத்துக் கட்டித் தழுவினார்.

தான் “நரகம் போனாலும் பரவாயில்லை. மந்திர உபதேசம் பெற்ற மற்றவர்கள் நற்கதி அடைவார்கள்” என்று எண்ணிய, அவருடைய அந்த பெருங்கருணையைத் தான், அவருடைய சீடர்களில் ஒருவரான திருவரங்கத்து அமுதனார், தாம் இயற்றிய “ராமானுஜ நூற்றந்தாதி” பாடலில் மிக அற்புதமாகப் பாடினார்.

காரேய் கருணை இராமானுச, இக்கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்குயிராய், அடியேற்கு இன்று தித்திக்குமே.

திருமாலிருஞ்சோலையில் வாழ்ந்துவந்த திருமாலையாண்டான் என்கிற ஆசாரியரிடம் திருவாய்மொழியின் நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தார். ஆளவந்தாரின் குமாரனான திருவரங்கப்பெருமாள் அரையரிடம் ஆச்சாரிய அபிமானம் போன்ற பல ரகசியங்களைத் (சரம பர்வ நிஷ்டை) தெரிந்து கொண்டார். திருவரங்கத்தில் ஒரு முறை பங்குனி உத்திர வைபவம் நடைபெற்றது. வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த உற்சவத்தில், ஒரு நாள் மட்டும் பெருமாளும் பிராட்டியும் ஏக ஆசனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பர். அப்படி இருவரும் ஒன்றாக இணைந்த அந்த சேர்த்தியில் ஸ்ரீராமானுஜர், உலக உயிர்கள் எல்லாம் உய்வடையும் படியாக சரணாகதி செய்தார். மூன்று கத்யங்களை பெருமாள் பிராட்டி முன்னிலையில் அரங்கேற்றினார். `சரணாகதி கத்யம்’, `வைகுண்ட கத்யம்’, `ஸ்ரீரங்க கத்யம்’ என்ற அந்த மூன்று நூல்களும் “கத்யத்ரயம்’’ என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமானுஜரின் சரணாகதியை அங்கீகரித்த திவ்ய தம்பதிகளான பெருமாளும் பிராட்டியும், ‘‘இனி இந்த உலகங்களையும் (உபய விபூதி என்று சொல்லப்படும் லீலா விபூதி, நித்ய விபூதி) உமக்கே தந்தோம் என்று அருள் செய்தனர். இரண்டு உலகங்களும் அன்று முதல் ராமானுஜர் வசம் வந்தது என்ற பொருளில் உடையவர் என்று அழைக்கப்பட்டார். பகவத் ராமானுஜரின் சம்பந்தம் பெற்றவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் என்னும் மோட்சத்தைக் கொடுக்க பகவத் ராமானுஜருக்கு உரிமை உண்டு என்பது இந்த நிகழ்வின் பொருள்.உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜரின் அவதாரத் திருநாளான (25.4.2023) அன்று, ஒவ்வொரு திருக்கோயிலிலும் இருக்கக்கூடிய அவருடைய திருமேனியை வணங்கி, அவருடைய பேரருளைப் பெற்று வாழ்வோம்.

The post உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜர் appeared first on Dinakaran.

Tags : Sri Ramanuja ,Kumkum Anmigam Ramanujar Jayanti ,God ,Sri Ramanujar ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…