×

செங்கல்பட்டில் பரபரப்பு வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கொள்ளை முயற்சி: சிசிடிவி டிஸ்க்கை தூக்கி சென்ற மர்ம நபர்கள்

செங்கல்பட்டு: வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் பக்கவாட்டு சுவற்றில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், முதல் கட்டமாக நம்மை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என திட்டமிட்டு 2 சிசிடிவி கேமரா டிஸ்க்கை உடைத்து தனியாக எடுத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆவணங்களை கலைத்து உள்ளே பணம் ஏதும் இருக்கிறதா? என அறை முழுவதும் தேடி பார்த்தனர்.

அங்கு பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, பணம் வைத்திருக்கும் அறையை உடைக்க முயற்சித்தனர். அப்போது, அபாய மணி ஒலித்ததால் உஷாரான மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா டிஸ்க்கை மட்டும் தூக்கிக்கொண்டு தப்பித்துவிட்டனர். அபாய ஒலி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சங்க அலுவலகத்தின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக செங்கல்பட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடன் சங்க அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அலுவலர்கள் வந்து அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. சிசிடிவி கேமரா டிஸ்க் மட்டும் களவு போயுள்ளதாக கூறினர். அதனை தொடர்ந்து கைரேகை நிபுணரை வரவழைத்து தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டில் பரபரப்பு வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கொள்ளை முயற்சி: சிசிடிவி டிஸ்க்கை தூக்கி சென்ற மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Agricultural Co ,Credit Union ,Chengalpattu ,Agricultural Cooperative Credit Union ,Sengalpattu Busy ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...