×

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்ட அறிவிப்பு: மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3ம் தேதி வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் ‘குரூப் “பி” மற்றும் குரூப் “சி” நிலையில், 7,500க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 3ம் தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் வரும் 4ம் தேதி ஆகும். தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்விணையதளத்தில் ‘TN Career Services Employment’ மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘‘AIM TN’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amirtha ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…