×

ஆட்டோவில் பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்: பாராட்டி பரிசு வழங்கினர்

தண்டையார்பேட்டை: ஆட்டோவில் பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை, போலீசார் பாராட்டி பரிசு வழங்கினர். ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (67). இவர் தனது வீட்டிலிருந்து செக் மேஸ்திரி தெருவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு சென்றதும் தான் பையில் எடுத்து வந்த ரூ.80 ஆயிரம் பணத்தை ஆட்டோவில் தவற விட்டது அவருக்கு தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து ராயபுரம் குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார்.

இதுதொட‌ர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் திருவொற்றியூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (35) என்பவரின் ஆட்டோவில் மும்தாஜ் பேகம் பணப்பையை தவறவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் பிரகாஷ் ராயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவு போலீசாரிடம் பணப் பையை ஒப்படைத்தார். இதனையடுத்து பணப்பையை தானாக முன்வந்து போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பிரகாஷின் நேர்மையை பாராட்டி உதவி கமிஷனர் லட்சுமணன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் ஆகியோர், அவருக்கு பரிசு வழங்கினர்.

The post ஆட்டோவில் பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்: பாராட்டி பரிசு வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Bandarbate ,
× RELATED வண்ணாரப்பேட்டையில் இரும்பு...