×

சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு

* காரணம் என்ன? போலீஸ் விசாரணை

நாகர்கோவில் : சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 60 ஆட்டு குட்டிகள், தீயில் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (36). இவர், குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள குறண்டி பகுதியில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகிறார்.

ஆடுகளை அவ்வப்போது மேய்ச்சலுக்காக காட்டுக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று காலையிலும் ஆடுகளை மேய்ச்சலுக்காக சுடலையாண்டி கொண்டு சென்றார். இந்த நிலையில் 60 குட்டி ஆடுகளை மட்டும் இரு கூண்டுகளில் தனித்தனியாக அடைத்திருந்தார்.

நேற்று மதியம் மேய்ச்சல் முடிந்து திரும்பி வந்த போது அந்த பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. குட்டி ஆடுகளை அடைத்திருந்த இரு கூண்டுகளும் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலாகி கிடந்தது. உள்ளே அடைக்கப்பட்டு இருந்த குட்டி ஆடுகளும் கருகி இறந்து கிடந்தன. இதை பார்த்ததும், சுடலையாண்டி கதறி அழுதார். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் பீடி குடித்து விட்டு சரியாக அணைக்காமல் போட்டதால், ஏற்பட்ட தீ காற்றில் வேகமாக பரவி ஆடுகள் அடைக்கப்பட்டு இருந்த கூண்டுகளிலும் பிடித்து ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பீடியை அணைக்காமல் போட்டதால் இந்த சம்பவம் நடந்து இருக்குமா? அல்லது இது நாச வேலையாக இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஒரே சமயத்தில் 60 குட்டி ஆடுகள் கருகி இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு appeared first on Dinakaran.

Tags : Suchindram ,Nagercoil ,Susindram ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...