×

மதுரவாயலில் பரபரப்பு முன்னாள் ஒன்றிய அரசு ஊழியரின் வீட்டில் 10 சவரன், பணம் கொள்ளை

* லாக்கரை உடைக்க முடியாததால் தப்பிய 100 சவரன் நகைகள்
* மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

சென்னை: ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர் வீட்டில் 10 சவரன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கவேல்(69). ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர். இவரது மனைவி வசந்தா தேவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணம் கோயிலுக்கு சென்றார். இந்த நிலையில், நேற்று இவர்களது வீட்டின் முன் மற்றும் பின் பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இவ்வீட்டின் அருகே வசிக்கும் தங்கவேல் உறவினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் சோதனை செய்தனர். இதில், ஒரு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு பீரோவில் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்து. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, ஒரு பீரோவில் இருந்த 10 சவரன் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளனர். அதே பீரோவில் இருந்த மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததாலும், லாக்கருக்கு ரகசிய எண் இருந்ததால், அதனை திறக்க முடியாததால் அதனை விட்டு சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் விட்டு சென்ற லாக்கரில் 100 சவரனுக்கு மேல் இருந்ததாகவும், லாக்கரை திறக்க முடியாததால் நகை தப்பியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரவாயலில் பரபரப்பு முன்னாள் ஒன்றிய அரசு ஊழியரின் வீட்டில் 10 சவரன், பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : union ,Maduravalam ,Maduravalai ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை