×

ராணிப்பேட்டை அருகே பயங்கரம் மகள்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை கொலை: 2 வாலிபர்களுக்கு வலை

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை அருகே மகள்களை கிண்டல் செய்த நபர்களை தட்டிக்கேட்ட தந்தையை வெட்டிக்கொன்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரேசன்(48). சிப்காட் பேஸ்-3 பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். 20 வயதான முதல் மகளுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரது கணவர் சரத்குமார் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் முதல் மகளும், 2வது மகளும் வாலாஜாவில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். கடந்த 21ம் தேதி மாலை கல்லூரி முடிந்து லாலாப்பேட்டையில் இருந்து வீட்டிற்கு இருவரும் வந்து கொண்டிருந்தனர். வழியில் இவர்களை லாலாப்பேட்டையை சேர்ந்த அஜித்(22) மற்றும் சரண் ஆகிய இருவரும் கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சுந்தரேசன், பெருமாள் கோயில் அருகே நின்றிருந்த அஜித், சரணிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரேசனின் தலையில் சரமாரி வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுந்தரேசனை அப்பகுதியினர் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து சிப்காட் போலீசார் கொலை வழக்கு பதிந்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

The post ராணிப்பேட்டை அருகே பயங்கரம் மகள்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை கொலை: 2 வாலிபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Payangaram ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...