ஜல்கான்: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் கவிழ்ந்து விடும் என சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைத்தது. பாஜவின் தேவேந்திர பட்னவிஸ் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார்.
சிவசேனா இரண்டாக உடைந்த நிலையில், கட்சியின் வில், அம்பு சின்னத்தையும் உத்தவ் தாக்கரே இழந்தார் முன்னதாக கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனா எம்எல்ஏக்கள் 16 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத், “16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் 15-20 நாட்களில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு கவிழ்ந்துவிடும்” என்று கூறினார்.
The post ஏக்நாத் ஷிண்டே அரசு 20 நாட்களில் கவிழும்: சஞ்சய் ராவத் எம்.பி.ஆருடம் appeared first on Dinakaran.