×

மாயமான வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது: தென்னந்தோப்பில் புதைத்த உடல் இன்று தோண்டி எடுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பூங்கொடிபுரம் 2வது குறுக்கு தெருவில் வசித்தவர் ஞானசேகரன்(39), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லூர்துமேரி. தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். புதுவை புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் ஞானசேகரன் ஆட்டோ ஓட்டி வந்தார். தினமும் மாலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் மறுநாள் காலை 8 மணிக்குத்தான் வீட்டுக்கு திரும்புவார்.

அதுபோல், கடந்த மார்ச் 29ம் தேதி காலை 8 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். காலை டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கியுள்ளார். மனைவி லூர்துமேரி காலை 10 மணியளவில் வேலைக்கு சென்று விட்டார். மாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பியபோது கணவர் ஞானசேகரனை காணவில்லை எனவும், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை எனவும் மனைவி லூர்துமேரி என்ற செல்வி (35) கடந்த 31ம் தேதி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மாயமான அன்று கணவர், காலை 11 மணிக்கு தன்னிடம் போனில் பேசியதாகவும், கணவரின் போன், ஆட்டோ பொருட்கள் வீட்டில் இருந்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ஞானசேகரனை தேடி வந்தனர்.

இதற்கிடையே, ஞானசேகரன் மாயமாகி பல நாட்கள் ஆனதால், அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுவை புதுவை நீதிமன்றத்தில் அவரது உறவினர்கள் தாக்கல் செய்தனர். மேலும், நேற்று காலை அரியாங்குப்பம் காவல்நிலையத்தில், மனைவி லூர்துமேரி மற்றும் அரியாங்குப்பம் ஓடைவெளி சின்னவீராம்பட்டினம் ரோட்டை சேர்ந்த செல்வம் (37) ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக ஞானசேகரன் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

செல்வத்துக்கும், லூர்துமேரிக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த ஞானசேகரன், மனைவி மற்றும் செல்வத்தை தட்டிக்கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி லூர்துமேரி, காதலன் செல்வத்துடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டி விட்டு, மாயமானதாக நாடகமாடி இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று ஞானசேகரனை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலம் அருகே அழுத்துவெளியில் உள்ள தென்னந்தோப்பிற்கு வரவழைத்து அடித்துக்கொன்று, அங்கேயே குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மனைவி லூர்துமேரி, காதலன் செல்வம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சடலத்தை இன்று போலீசார் தோண்டி எடுக்க உள்ளனர்.

The post மாயமான வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது: தென்னந்தோப்பில் புதைத்த உடல் இன்று தோண்டி எடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sudde ,South Nadu ,Puducherry ,Ganasekaran ,Puducherry Ariyangupam Manavavavi Poongodipuram ,South South Korea ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு