×

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை?..வனத்துறையினர் விசாரணை

அந்தியூர்: அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆட்டை கடித்து குதறி கொன்ற மர்ம விலங்கு சிறுத்தையா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நகலூர் பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (35). இவர், சுமார் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று விட்டு திரும்பவும் மாலை வீட்டுக்கு வந்து அனைத்து ஆடுகளையும் கட்டி வைத்துள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது கர்ப்பமாக இருந்த ஒரு வெள்ளாடு மட்டும் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டை அக்கம்பக்கத்தில் சகுந்தலா தேடியுள்ளார். சுமார் 200 மீட்டர் தூரம் தள்ளி சாமியாத்தாள் என்பவரின் வாழைத்தோட்டத்திற்குள் ஆடு இறந்த நிலையில் கிடந்ததுடன், ஆட்டின் பாதி உடலை மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் விட்டு சென்றது தெரியவந்தது. மேலும், கர்ப்பமாக இருந்த ஆட்டின் வயிற்றில் இருந்த மூன்று குட்டிகள் அருகே இறந்த நிலையில் கிடந்தன. அப்பகுதியில் மர்ம விலங்கின் கால் தடம் பதிந்து இருந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் உத்தரசாமி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கால் தடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும், வெள்ளாடு உடலை அத்தாணி கால்நடை மருத்துவர் மோகன சுந்தரராஜ் உடற்கூறு ஆய்வு செய்தார். பதிவான மர்ம விலங்கின் கால் தடம் சிறியதாக உள்ளதால், இதனை மாவட்ட வன அலுவலரின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். பெருமாபாளையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம விலங்கு ஒன்று ஊருக்குள் புகுந்து ஆட்டை கொன்று தின்று இருக்கலாம் எனவும், அந்த விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் எனவும் அந்தியூர் சுற்றுவட்டார கிராம மக்கள் இடையே பரவிய தகவலால் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

The post அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை?..வனத்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Andiur ,Anthiur ,Andur ,
× RELATED பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு...