×

கரடிக்கல்லில் இன்று ஜல்லிக்கட்டு 600 காளைகள், 700 வீரர்கள் பதிவு

 

திருமங்கலம், ஏப். 23: திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாணத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று (ஏப்.23) காலை 8 மணிக்கு துவங்குகிறது. இதற்காக கரடிக்கல் கிராமத்தில் திருமங்கலம் – செக்கானூரணி ரோட்டில் கள்ளர் பள்ளிக்கு எதிரே பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. காலரி, வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த போட்டிக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் மதியம் ஆன்லைனில் துவங்கியது.இதன்படி 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் கரடிக்கல் கிராமத்தினை சேர்ந்த உள்ளூர் மாடுபிடி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும், அனைவரும் பார்வையாளர்களாகவே இருப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன், கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர்.

இதுகுறித்து ஜல்லிகட்டு விழா கமிட்டியினர் கூறுகையில், குறிப்பிட்ட நேரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிய துவங்கும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீரூடைகள் வழங்கப்படும். வெற்றி பெறும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்கக்காசு, குத்துவிளக்கு, மின்விசிறி, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உாிய சிகிச்சையளிக்க மருத்துவ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்றனர்.

The post கரடிக்கல்லில் இன்று ஜல்லிக்கட்டு 600 காளைகள், 700 வீரர்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jallikattu 600 bulls ,Karadikkall ,Thirumangalam ,Sundararaja Perumal ,temple ,Karatikkal ,Tirumangalam ,Tirukalyana ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து