×

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் செண்டு மல்லி விலை கடும் சரிவு: ஒரு கிலோ ரூ.5க்கு விற்பதால் பறிக்காமல் செடியிலே விட்ட விவசாயிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் செண்டு மல்லி பூ விலை கடுமையாக சரிந்து ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. இதனால் செலவினங்களை யோசித்து விவசாயிகள் பூக்களை செடியிலே பறிக்காமல் விட்டு விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே உள்ளன. இவற்றில் நெல், வாழை, மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக பூக்கள் விளைச்சல் தான் மாவட்டம் முழுவதும் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது.

இங்கு விளையும் சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, ரோஜா பூ, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் உள்மாவட்ட தேவைக்கும் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. பூக்கள் பயிரிடும் விவசாயிகள் ஒரு சில நேரங்களில் விலை கை கொடுத்தாலும் மற்ற நேரங்களில் அதற்கான செலவினங்கள் மற்றும் நோய் தாக்குதலால் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுகளில் வரத்து அதிகரிப்பால் செண்டு மல்லி பூக்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனையாகிறது.

ஒரு கிலோ செண்டு மல்லி ரூ.5 முதல் ரூ.10 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இது பயிரிட்ட செலவு, பறிப்பு கூலி, வாகன வாடகைக்கு கூட கட்டுப்படியாகததால் சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலே விட்டு விட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் அருகே உலகம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா கூறுகையில், ‘சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் செண்டு மல்லி பயிரிட்டு இருந்தேன்.செடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்த தருணத்தில் பூக்களை பறிப்பதற்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பறித்தாலும் பூ விலை சரிவால் பறிக்கும் நபர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது.

தொடர்ந்து செண்டுமல்லி தோட்டத்தை பராமரிக்கும் சிக்கல், செலவினங்களை யோசித்து மாற்று பயிரிட முடிவு செய்து பூக்களை பறிக்காமல் விட்டு விட்டேன்’ என்றார்.

The post திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் செண்டு மல்லி விலை கடும் சரிவு: ஒரு கிலோ ரூ.5க்கு விற்பதால் பறிக்காமல் செடியிலே விட்ட விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,sentu malli ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...