×

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த ஜம்மு –காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!!

ஸ்ரீநகர் : புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ரூ.300 கோடி லஞ்சம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது கிரு நீர்மின் திட்டம் தொடர்பான ரூ.2,200 கோடி மதிப்புடைய திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க ரூ.300 கோடி லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன் வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கில் வருகிற 28ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய சத்யபால் மாலிக், இந்த வழக்கு தொடர்பான சில விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி சிபிஐ கேட்டு கொண்டுள்ளதாகவும் தான் ராஜஸ்தான் செல்ல இருப்பதால் ஏப்ரல் 27 அல்லது 28ம் தேதிகளில் ஆஜராக உள்ளதாக சிபிஐ-யிடம் கூறியதாகவும் தெரிவித்தார். முன்னதாக அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற பாஜக தலைவர் ராம் மாதவ் தனக்கு பணம் கொடுத்ததாக சத்யபால் மாலிக் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி ராம் மாதவ் சத்யபால் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019 பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து அண்மையில் பேட்டி அளித்த சத்யபால் மாலிக், சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றும் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணிக்கும் போது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார். புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்றும் இது குறித்து பேச வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்தது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Samman ,Governor ,Jammu ,Kashmir ,Satyabal Malli ,Modi ,Pulwama attack ,Srinagar ,Former Governor of ,Satyapal Mallick ,Pulwama ,Former ,Governor of ,Satyapal Mally ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...