×

விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை கோடை மழையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்

 

ஆண்டிபட்டி, ஏப். 22: கோடை மழையை சரியான முறையில் பயன்படுத்தும் வழிமுறை குறித்து வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னைநார் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர்பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமில்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர்தேவை அறிந்து நீர்ப்பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பை குறைக்கலாம். மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை செய்து நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரைக் காக்கலாம். நிலச்சரிவிற்கு குறுக்கே ஆழச்சால் அகலப்பாத்தி முறையினை கடைபிடித்து சாகுபடி மேற்கொள்ளலாம். கோடை மழை கிடைக்கும்போது சரிவிற்கு குறுக்கே மழைநீரை வழிந்தோடச் செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம்.

மேலும், நீர்ப்பாய்ச்சும்போது கூட மண் ஈரம், நீண்ட நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்றதாக இருக்கும். இருக்கும் குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்களைக் காத்திடவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களைக் காத்திடவும் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைக் கடைபிடிக்கும்போது வறட்சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும். ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர்ப்பாய்ச்சும்போது ஒரு வரப்புவிட்டு மறு வரப்பிற்கு நீர்ப்பாய்ச்சும் முறையில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். வரப்பு பயிராக ஆமணக்கு பயிரடலாம். கோடையில் சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இலைவழித்தெளிப்பு உரம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தில் நீரில் கரையும் உரப் பயன்பாடு கடைபிடித்தலால் நல்ல பயன் தரும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாலை நேரத்தில் கடைபிடிப்பது நல்லது. கூடுதல் விபரங்களுக்கு அருகே உள்ள வேளாண்துறை அலுவலகத்தை அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை கோடை மழையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...