×

குடியாத்தம் நகரில் பரபரப்பு: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் திடீர் போராட்டம்; டிஎஸ்பி பேச்சுவார்த்தை

 

குடியாத்தம், ஏப்.22: குடியாத்தம் நகரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் நேதாஜி சிலை சந்திப்பு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே தனியார் பார் இயங்கி வருகிறது. இந்த சந்திப்பு வழியாக பேரணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், மாதனூர் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் சென்று வருகிறது. இந்த டாஸ்மாக் கடை இடையூறாக இருப்பதால் இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இங்குள்ள பாரில் மது குடித்த 10 பேர் கும்பல் நேதாஜி சந்திப்பு குடியிருப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடை எதிரே திரண்டனர். தொடர்ந்து, டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது டிஎஸ்பி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post குடியாத்தம் நகரில் பரபரப்பு: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் திடீர் போராட்டம்; டிஎஸ்பி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,store ,DSP ,Tasmock ,Dinakaran ,
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...