×

வீட்டில் புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.25லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைது

 

அரியலூர், ஏப். 22:அரியலூர் மாவட்டம் மேலமைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜூலி (48) என்பவர், தனது கணவர் மற்றும் கணவரின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் தாரத்தில் பிறந்த மகன்களுடன் வசித்து வருகிறார். முதல் தாரத்தில் பிறந்த மகன் ஒருவருக்கு 10 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. மகனை குணப்படுத்த மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக காவனூர் அருகில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மூலம் திண்டிவனத்தைச் சேர்ந்த கொல்லிமலை சித்தர் தியாகம் டேனியல் என்பவரை உறவினர்களுடன் ஜூலி சந்தித்துள்ளார்.

அதற்கு தியாகம் டேனியல் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் என்றும் அதனை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனை அடுத்து தியாகம் டேனியல்(62) அவரது மனைவி தீபா ஜெனிபர் (43) ஜூலியின் வீட்டிற்கு வந்து பூஜை செய்து 3 அடி ஆழம் பறித்து ஒரு செப்பு தகடு எடுத்து காண்பித்து, 8 அடி ஆழத்திற்கு கீழே புதையல் உள்ளது என்று ஆசை வார்த்தை கூறியும், எடுக்காவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று ஜூலியை பயமுறுத்தி அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று 15 நாட்கள் பழனிச்சாமி வீட்டில் தங்கி ஜூலி வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர். இதற்காக பழனிச்சாமி ஜூலியிடம் வங்கி மூலமாகவும் நேரடியாகவும் பலமுறையாக மொத்தம் ரூ.25லட்சம் பெற்றுள்ளார்.

எந்த வித புதையலும் எடுத்து தராத நிலையில் 25 லட்சம் பணம் குறித்து ஜூலி, பழனிச்சாமி மற்றும் தியாகம் டேனியலிடம் கேட்டதற்கு இருவரும் கோபமாக பேசினால் புதையல் எடுக்க உன்னை நரபலி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று மிரட்டி உள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் பிரிவில் 2021 ல் புகார் அளித்தார். இதனைடுத்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த தியாகம் டேனியல் மற்றும் தீபாவை போலீசார் தேடி வந்த நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் (பொறுப்பு)வழிகாட்டுதலின்படி நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் குணமதி ,காவல் உதவி ஆய்வாளர் அமரஜோதி , முருகன் தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கைது செய்தனர்.இதனை அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்றம் உத்தரவு படி காவல்துறையினர் தியாகம் டேனியல்-யை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், மற்றும் அவரது மனைவி தீபா ஜெனிபரை திருச்சி பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

The post வீட்டில் புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.25லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Julie ,Melamaikhelpatti ,Ariyalur district ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...