×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும்: காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா நடன கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார். இந்த விவகாரம், பூதாகரமாக வெடித்து நடன கல்லூரி மாணவிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரிபத்மன் ஏப்ரல் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர்.

தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளை தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் ஆஜரான சென்னை மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும்: காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Haripadman ,Madras Principal Sessions Court ,Chennai ,Chennai Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...