×

ஆவின் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: 3 பேருக்கு வலை

பெரம்பூர்: சூளை பகுதியில் ஆவின் ஊழியரை சரமாரியாக தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சூளை, ஆடுதொட்டி தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (30). இவர், சூளை அங்காளம்மன் கோயில் தெருவில் ஆவின் பால் பூத் நடத்தி வருகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன், இவரது கடைக்கு வந்த புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த விஜய் (21), வீண் தகராறு செய்துள்ளார். மீண்டும், மறுநாள் மாலை கடைக்கு வந்து, அங்கு பணிபுரியும் சரவணன் (38) என்பவரை தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து நேற்று சரவணன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், புளியந்தோப்பு போலீசார், விஜயை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அப்போது, விஜய் பிளேடால் தனது உடலில் கிழித்துக்கொண்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் விஜயை அவரது தயாருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் விஜய் தனது அண்ணன் வைகோ என்கின்ற விக்னேஷ் மற்றும் நண்பர் விக்கி ஆகியோருடன் சேர்ந்து, மீண்டும் ஆவின் பால் பூத்திற்கு கடை உரிமையாளர் கதிர்வேலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கதிர்வேலுக்கு தலை முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கதிர்வேல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜய் அவரது அண்ணன் விக்னேஷ் மற்றும் விக்கி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

The post ஆவின் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Net for 3 ,Perambur ,Sulai ,Kiln, Adutotti Street ,Aavin ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...