×

ஆடுவதற்கு தயார்…ஆர்ச்சர் உற்சாகம்

மும்பை: முழங்கை வலியால் அவதிப்பட்டு வந்த மும்பை இந்தியன்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இன்று களமிறங்குகிறார். இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆர்ச்சர், கையில் ஏற்பட்ட காயம் அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சைகள் காரணமாக நீண்ட நாட்களாக களத்துக்கு வரவில்லை. அதனால் இங்கிலாந்து விளையாடிய, வென்ற டி20 உலக கோப்பை தொடர் உட்பட பல சர்வதேச தொடர்களில் அவரால் விளையாட முடியாமல்போனது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதற்காக இந்தியா வந்தவர், ஏப். 2ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சுமாராகப் பந்துவீசினாலும் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை. முழங்கையில் மீண்டும் ஏற்பட்ட வலிதான் இதற்கு காரணம். மருத்துவர் ஆலோசனைப்படி கடந்த 4 ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. ஓய்வில் இருந்த ஜோப்ரா நேற்று முன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கும் மும்பை அணிக்கு, இது கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை மும்பையில் நடைபெற உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ஆர்ச்சர் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லாமலேயே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் மும்பை அணி, ஆர்ச்சரை ‘துருப்புச்சீட்டு’ வீரராகப் பயன்படுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

The post ஆடுவதற்கு தயார்…ஆர்ச்சர் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Zobra Archer ,Punjab ,Archer ,Dinakaran ,
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை