×

பூஞ்ச் தாக்குதலில் 5 வீரர்கள் பலி: டிரோன், ஹெலிகாப்டர் மூலம் தீவிரவாதிகளை தேடும் பணி

பூஞ்ச்: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலால் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை டிரோன், ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் படா-டோரியா வனப்பகுதியில் ராஷ்ட்ரிய ரைபிள் படைப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டு வீசியும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த கொடூர தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அடர்ந்த காடுகளைக் கொண்ட டோட்டா-கலி-படா டோரியா முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிரவாதிகளை கண்டுபிடிக்க டிரோன், மோப்ப நாய்கள் மற்றும் எம்ஐ ஹெலிகாப்டர் கொண்டு ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களின் சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்து ஜம்முவில் பாஜ, விஎச்பி, ராஷ்டிரிய பஜ்ரங் தளம், சிவசேனா, டோக்ரா முன்னணி மற்றும் ஜம்மு மாநில அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடந்தன.

The post பூஞ்ச் தாக்குதலில் 5 வீரர்கள் பலி: டிரோன், ஹெலிகாப்டர் மூலம் தீவிரவாதிகளை தேடும் பணி appeared first on Dinakaran.

Tags : Poonch Attack ,Poonch ,Kashmir ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...