×

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் திரவ உணவு பொருள் விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்: காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும். இதை பூர்த்தி செய்ய புதுப்புது உணவுகளை உருவாக வாய்ப்பு உள்ளது. கோடைகால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் அல்லது பதிவு சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்கவேண்டும்.

பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களை தயாரிக்க பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வு கூடங்களில் பகுப்பாய்வு செய்து அறிக்கை வைத்திருக்கவேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்கவேண்டும். திரவ ஆகாரங்களை தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்கவேண்டும். விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் கடை மூடும்வரை விற்பனையாகாமல் மீதம் இருந்தால் அப்புறப்படுத்தவேண்டும். திரவ ஆகாரங்களை ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

கடையில் திரவ உணவு பொருள்களை நுகர்வோர் வாங்கும்போது உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதிசெய்யவேண்டும். கெட்டுப்போன பொருள் இருந்தால் அவற்றை தவிர்க்கவேண்டும். திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்கவேண்டும். நுகர்வோர் கோடைகாலத்தில் அதிகளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களின் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்கவேண்டும். திரவ உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடு அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடு காணப்பட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கோடைகாலம் தொடங்கியுள்ளதால் திரவ உணவு பொருள் விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்: காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Collector ,Kanchipuram ,Arthi ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...