×

அரசியல்வாதிகள் சந்தித்தால் அரசியல் தான் பேசுவார்கள்; நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல: நிதிஷை சந்தித்த ஹரிஷ் ராவத் பேட்டி

பாட்னா: அரசியல்வாதிகள் சந்தித்தால் அரசியல் தான் பேசுவார்கள் என்றும், நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல என்று நிதிஷ் குமாரை சந்தித்த ஹரிஷ் ராவத் தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத், நேற்று பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தார். இதுகுறித்து ஹரிஷ் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், ‘இருவருக்கும் இடையில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
காங்கிரஸ் மேலிடம் என்னை குறிப்பிட்ட நோக்கத்திற்காக பீகார் அனுப்பவில்லை. இருப்பினும், நானும் நிதிஷ் குமாரும் அரசியல் நிலைமைகள் குறித்து தீவிரமாக விவாதித்ேதாம். நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல, அரசியல் தலைவர்களின் சந்திப்பின் போது, அரசியல் பற்றி தான் பேசுவார்கள். நிதிஷ் குமார் எனது பழைய நண்பர், அவர் மாநிலத்தில் செய்துள்ள நல்ல பணிகளை பாராட்டினேன். அவரது பணியை பாராட்ட வேண்டியது அனைவரின் பொறுப்பு’ என்றார்.

தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நிதிஷூடனான புகைப்படத்தை வெளியிட்டு அதில், ‘2024ல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வலுவான குரல் நிதிஷ் குமார்’ என்று தலைப்பிட்டுள்ளார். இருவரின் சந்திப்பின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து தேசிய அரசியலில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி சென்றார். அவர் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில் ஹரிஷ் ராவத்தின் திடீர் பாட்னா வருகையின் பின்னணியில், எதிர்க்கட்சிகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டங்களின் ஒன்றாக நிதிஷ் குமாருடனான சந்திப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

The post அரசியல்வாதிகள் சந்தித்தால் அரசியல் தான் பேசுவார்கள்; நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல: நிதிஷை சந்தித்த ஹரிஷ் ராவத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Harish Rawat ,Nitish Patna ,Nitish ,
× RELATED பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத...