- Senthamangalam
- சேந்தமங்கலம் மாவட்டம்
- Karavalli
- நடுக்கோம்பை
- பள்ளம்பாறை
- சின்னப்பள்ளம்பாறை
- புளியங்காடு
- வெண்டாங்கி
- எருமப்பட்டி மாவட்டம்
- முத்துகாபட்டி
- Bodinayakanpatti
சேந்தமங்கலம், ஏப்.21: சேந்தமங்கலம் வட்டாரம் காரவள்ளி மற்றும் நடுக்கோம்பை, பள்ளம்பாறை, சின்னப்பள்ளம்பாறை, புளியங்காடு, வெண்டாங்கி, எருமப்பட்டி வட்டாரம் முத்துகாப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, அலங்காநத்தம், புட்டி ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மா சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு உரிய காலத்தில் பருவமழை கைகொடுத்ததால், மா மரங்களில் அதிகளவில் பூ பிடித்து விளைச்சல் அதிகரித்தது. தற்போது, மா சீசன் களை கட்டியுள்ளது. கிளிமூக்கு, பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, சேலம் குண்டு, பெங்களூரா, இமாம் பசந்த் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மாங்காய்கள் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மண்டிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து மொத்தமாக வாங்கி லாரிகள் மூலம் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கோயம்புத்தூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்தாண்டு ஒரு டன் லைன் மாங்காய் ₹40 ஆயிரத்திற்கும், வெட்டு மாங்காய் ₹30 ஆயிரத்திற்கும், பங்கனப்பள்ளி ₹70 ஆயிரத்திற்கும் விற்பனையானது. ஆனால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. வெட்டு மாங்காய் ₹25 ஆயிரத்திற்கும், லைன் மாங்காய் ₹40 ஆயிரத்திற்கும், பங்கனப்பள்ளி ₹50 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது மாங்காய் அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை சரிந்துள்ளது. இன்னும் சில வாரங்கள் போனால் விலை ஏற்றம் அதிகரிக்கும்,’ என்றனர்.
The post சேந்தமங்கலத்தில் மாங்காய் விற்பனைக்கு குவிப்பு appeared first on Dinakaran.