×

சித்திரை பரணி விழாவை முன்னிட்டு

நாகப்பட்டினம், ஏப்.21: திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயில் சித்திரை பரணி விழாவை முன்னிட்டு பக்தர்கள் சப்பரத்தை இழுத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது.

தெருவை அடைத்து கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர். சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர். திருச்செங்காட்டங்குடி, திருமருகல், புதுக்கடை, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், கீழப்பூதனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

The post சித்திரை பரணி விழாவை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : Chitrai Bharani festival ,Nagapattinam ,Chitrai Pharani festival ,Thiruchengattangudi Uttarapadeeswarar temple ,Thirumarukal ,Nagapattinam… ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...