திருக்கழுக்குன்றம்: பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஏரிக்கரையை சமன்படுத்த வந்த பொக்லைனை புலியூர் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மண் எடுக்கும் டெண்டர் விடப்பட்டது. இதனை தொடர்ந்து, லாரிகளில் மண் எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு திடீரென மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மண் எடுத்து முடித்தவுடன் அந்த ஏரியின் கரையை பலப்படுத்தி சமன்படுத்தி தருவதாகவும், மண் எடுத்ததால் ஏரிக்கு வெளிப்புறத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்களை சீர் செய்து தருவதாகவும் பொதுப்பணித் துறை நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மண் எடுப்பது நிறுத்தப்பட்டவுடன் ஏரியின் கரையை பலப்படுத்தி சமன்படுத்துதல் உள்ளிட்டவைகளை எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர். இது தொடர்பாக ஏரி கரையை சமன்படுத்தி பலப்படுத்த வேண்டும், பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் லாரிகள் சென்றதால் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என புலியூர் பொதுமக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும், அதிகாரிகள் செவிசாய்க்காததால் பொதுமக்கள் தரப்பில் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையிலும், பசுமை தீர்ப்பாயம் வருகின்ற 26ம் தேதி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று பொதுப்பணித் துறையினர் அவசர, அவசரமாக பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வந்தனர். நடந்து வரும் வழக்கிற்கு முகாந்திரமான தடையத்தை அழிக்கும் விதமாக ஏரிக்கரையை சமன்படுத்தி பலப்படுத்தும் பணியை செய்தனர்.
இதையறிந்த புலியூர் பொதுமக்கள், ஏரிப் பகுதிக்கு வந்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து பணியை நிறுத்தினர். இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், பொக்லைன் இயந்திரம் விடுவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குள்ளநிலையில் ஏரிக்கரையை சமப்படுத்திய பொக்லைன் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.