×

விஷ ஊசி போட்டு முதியவர்கள் 300 பேர் கருணை கொலையா?: பள்ளிபாளையம் மருத்துவமனை பிணவறை உதவியாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், கடந்த 15 ஆண்டில் 300 முதியவர்களை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாக, வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை பிணவறை உதவியாளர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில், தற்காலிக உதவியாளராக வேலை செய்பவர் மோகன்ராஜ் (50). இவர் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு பூச்சி மருந்து கொண்ட ஊசியை செலுத்தி, கருணை கொலை செய்வதாகவும், இதற்காக அவர்களது உறவினர்களிடம் ரூ.5 ஆயிரம் வரை பணம் பெறுவதாகவும், கடந்த 15 வருடமாக இதுபோல் 300 பேரை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்துள்ளதாகவும், ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் கூறுகையில், ‘பணம் பெற்றுக்கொண்டு கருணை கொலை செய்வதாக, பிணவறை தற்காலிக ஊழியர் மோகன்ராஜ் மீது, வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதியவர்களை கருணை கொலை செய்தது உண்மையென விசாரணையில் தெரியவந்தால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றார்.இதுகுறித்து கிரமங்களில் உள்ள பெரியவர்கள் கூறுகையில், கிராமப்புறங்களில் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் உள்ளவர்களை கவனிக்க முடியாததால், அவர்களது குடும்பத்தினரே கருணைக் கொலை செய்யும் சம்பவங்கள் சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. கருணை கொலைக்கு 2 விதமான காரணங்கள் கூறப்படுகிறது.

முதியவர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும், பராமரிப்பதற்கு உரிய ஆட்கள் இல்லாததும், இதற்கு காரணமாய் அமைகிறது. அந்திமக் காலத்தில் குடும்பத்தினரின் தூற்றலுக்கு ஆளாவதை தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களை கருணை கொலை செய்து விடுமாறு மன்றாடுபவர்களும் உள்ளனர். 2 மகன்கள் உள்ள குடும்பத்தில் படுத்த படுக்கையான தாய், தந்தையை யார் பராமரிப்பது? என்பதில் ஏற்படும் மனகசப்புகளும் இத்தகைய கருணை கொலைகளுக்கு வழி வகுக்கிறது. கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் நீதிமன்றங்களில் உள்ளது. மோகன்ராஜ் போன்றோர் இதுபோன்ற கொலைகளுக்கு உடந்தையாகவோ அல்லது காரணமாகவோ உள்ளனர். இவர் மட்டுமின்றி ஏராளமான போலி மருத்துவர்களும், இதனை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். இதனை போலீசார் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post விஷ ஊசி போட்டு முதியவர்கள் 300 பேர் கருணை கொலையா?: பள்ளிபாளையம் மருத்துவமனை பிணவறை உதவியாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு