×

போலீசார் மீது மிளகாய் பொடி தூவி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து கைதிகளை வெட்டிக்கொல்ல முயற்சி: அலறியடித்து ஓடிய உள்நோயாளிகள்

விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பலை 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு (29), யுவராஜ் (28). கடந்த மார்ச் 2ம் தேதி திண்டுக்கல்லில் சின்னத்தம்பி என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில், இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2 பெண்கள் உட்பட இவர்களையும் சேர்த்து மொத்தம் 6 பேர் கைதாகியுள்ளனர். 2 பெண்களும் மதுரை மத்திய சிறையிலும், விஷ்ணு, யுவராஜ் உள்ளிட்ட 4 பேரும் விருதுநகர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், விஷ்ணு மற்றும் யுவராஜூக்கு கையில் காயம் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதற்காக 4 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் சிலம்பரசன் மற்றும் அழகுராஜா பாதுகாவலராக இருந்துள்ளனர். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட சின்னதம்பியின் உறவினர்கள் என கருதப்படும் 6 பேர், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 4வது மாடிக்கு மிளகாய்பொடி மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்றிரவு வந்தனர். 6 பேரும் முகமூடி அணிந்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிகிச்சையில் இருந்த கைதிகள் விஷ்ணு, யுவராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். போலீசார் இருவரும் கைதிகளை காப்பாற்ற கொலை கும்பலுடன் போராடியுள்ளனர். கைதிகளில் ஒருவரை மீட்டு, காவலர் அழகுராஜா, பக்கத்து அறையில் தள்ளி பூட்டியுள்ளார். காவலர் சிலம்பரசனிடம் துப்பாக்கி இருந்துள்ளது. ஆனால், அந்த அறையில் நோயாளிகள் பலர் இருந்ததால், அவரால் துப்பாக்கியை எடுத்து சுட முடியவில்லை. இதனால், துப்பாக்கியை திருப்பிப் பிடித்து, கொலை செய்ய வந்த கும்பலை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த களேபரத்தில் நோயாளிகள் சிலர் அலறியடித்து வெளியே ஓடி விட்டனர். உடனே துப்பாக்கியை உயர்த்திய சிலம்பரசன், கொலை செய்ய வந்த கும்பலை நோக்கி சுட்டு விடுவேன் என்று கூறி எச்சரித்துள்ளார். இதையடுத்து முகமூடிக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. தகவலறிந்து எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள், டிஎஸ்பி அர்ச்சனா இருவரும் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டு, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அரிவாள் வெட்டில் காயமடைந்த இருவருக்கும், போலீஸ் பாதுகாப்புடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்குள் புகுந்து 2 கைதிகளை வெட்ட முயன்ற குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலீசார் மீது மிளகாய் பொடி தூவி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து கைதிகளை வெட்டிக்கொல்ல முயற்சி: அலறியடித்து ஓடிய உள்நோயாளிகள் appeared first on Dinakaran.

Tags : Vrudunagar ,Vrudhunagar ,
× RELATED விஸ்வநாததாஸ் காலனியில் 6 மாதமாக பூட்டி...