×

பெரவள்ளூரில் வீட்டு கதவை பூட்டிக்கொண்டு 5 மாத கர்ப்பிணி தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

பெரம்பூர்: பெரவள்ளூரில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு 5 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம். காலனி 28வது ெதருவை சேர்ந்தவர் பிரசன்னா (35). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (29). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயஸ்ரீ தற்போது ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர் இட்லி மாவு அரைப்பதற்காக ஜெயஸ்ரீ க்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கதவு பூட்டப்பட்டிருந்ததால் பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து பக்கத்தில் வசித்துவரும் தாமு என்பவரை வரவழைத்து பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு ஜெயஸ்ரீ மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து ஜெயஸ்ரீயை பரிசோதனை செய்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெரவள்ளூர் போலீசார் சென்று ஜெயஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொளத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் சிவகுமார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில மாதங்களாகவே ஜெயஸ்ரீ மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன்காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் திருமங்கலம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படுகிறது. திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டது எதற்காக, குடும்ப பிரச்னை காரணமாகவா, மன உளைச்சலா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். இதுசம்பந்தமாக கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post பெரவள்ளூரில் வீட்டு கதவை பூட்டிக்கொண்டு 5 மாத கர்ப்பிணி தற்கொலை: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Peravallur ,RTO ,Perampur ,Chennai Peravallur ,
× RELATED பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்