காங்கயம், ஏப்.19: தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் அரசு மருத்துவமன, காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட நகரின் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிகளான, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. சமையல் முடிந்தவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். காஸ் பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடி விட வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்பநிலையில் அணைக்க தீ தடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும்.
தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும். உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்படும் என காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.
The post தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு appeared first on Dinakaran.