×

ஊராட்சிகள் உதவி இயக்குனர்அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

தர்மபுரி, ஏப்.19: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கை வாரியாக நிலுவை இனங்கள் குறித்தும், நீண்ட நாளாக நிலுவையில் உள்ள நிலஅளவை மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீதான தொடர்ந்து நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது, உடனுக்குடன் தீர்வு காணப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வந்திருந்த விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகளையும், இசேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திலும் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, செயல் அலுவலர் ஜீவானந்தம், நல்லம்பள்ளி துணை வட்டாட்சியர்கள் சுதாகர், பாலகிருஷ்ணன், சண்முகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஊராட்சிகள் உதவி இயக்குனர்
அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
appeared first on Dinakaran.

Tags : Panchayats ,Dharmapuri ,Collector ,Shanthi ,Assistant ,Nallampally District Collector ,Assistant Director ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம்