×

கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றபோது விபரீதம் சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

ஆவடி: ஆவடி அடுத்த ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டி(26). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கவிதா (26) என்கின்ற மனைவியும் பிரணவ் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை ஆலத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய்க்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது, மகனை முதலில் குளிப்பாட்டி விட்டு கரையோரம் அமர வைத்தனர். பின்னர், கணவன் மனைவி இருவரும் குளிக்க சென்றுள்ளனர், சிறிது நேரம் கழித்து சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துக் கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர், சிறுவனை காப்பாற்றி கரையோரம் கொண்டு வந்தனர். இதில், சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். உடனே, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, செல்லும் வழியிலேயே பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்ததும், புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றபோது விபரீதம் சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Krishna ,Aavadi ,Arulpandi ,Alatur ,Kavita ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...