×

மீஞ்சூர் அருகே ஆண்டார் மடம் முதல் காட்டூர் வரை 6 கிமீ தூரம் குண்டும், குழியுமான சாலை: தரமாக அமைக்க கோரிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே ஆண்டார் மடம் முதல் காட்டூர் வரை உள்ள 6 கிமீ தூரத்துக்கு குண்டும், குழியுமான மோசமான சாலைக்கு பதில் தரமான சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் அடுத்த பழவேற்காட்டில் இருந்து ஆண்டார்மடம், கடப்பாக்கம் வழியாக காட்டூர், மீஞ்சூர் வழியாக சென்னைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரி மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் இவ்வழியாகதான் சென்று வருகின்றனர். இதில் குறிப்பாக, ஆண்டார்மடம் கிராமத்தில் இருந்து காட்டூர் வரை சுமார் 6 கிமீ தொலைவிற்கு சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மேலும், இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று சிறு மேம்பாலங்களும் கடந்த 10 வருடத்திற்கு முன்பாக கட்டப்பட்டதால் சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனால், இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் தெரு விளக்கு இல்லாத காரணத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. ஏற்கெனவே, சேதமடைந்த பாலங்களில் உள்ள ஓட்டையில் விழுந்து விபத்துகளும் நடந்துள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சாலையை உடனடியாக செப்பனிட்டு தரமான தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மீஞ்சூர் அருகே ஆண்டார் மடம் முதல் காட்டூர் வரை 6 கிமீ தூரம் குண்டும், குழியுமான சாலை: தரமாக அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Andar Math ,Kattur ,Meenjoor ,Ponneri ,Dinakaran ,
× RELATED திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்றவர் கைது