- அய்யப்பாக்கம்
- வனகரம்
- கரப்பாக்கம் கணபதி
- சென்னை
- மதுரவயல்
- சட்டமன்ற உறுப்பினர்
- காரப்பாக்கம் கணபதி
- திமுக
- சட்டப்பேரவை
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32558080/thumb.jpg)
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி (திமுக) பேசியதாவது: மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145, 148, 150, 154, 155 மற்றும் 149, 152 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது முடிகிற தருவாயில் இருக்கிறது. என்னுடைய தொகுதியில் அயப்பாக்கம், வானகரம், அடையாளம்பட்டு 3 ஊராட்சிகள் உள்ளன. அந்த ஊராட்சிகளை சென்னை மாநகராட்சிகளோடு இணைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கடந்த காலத்தில் மனு கொடுத்த போது, இதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவித்தார்.
ஆகவே 2006-2011ம் ஆண்டில் கலைஞர் ஆட்சி காலத்தில் மதுரவாயல் தொகுதி மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட போது, அப்போது ஊராட்சியாக இருக்கும் போதே பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி விட்டனர். அதே மாதிரி இந்த 3 ஊராட்சிகளையும் சேர்ப்பதற்கு முன்பாக இதே போன்று ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்குவதற்கு சாத்திய கூறுகள் உள்ளனவா?, என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘நகரத்தோடு ஒட்டியிருக்கின்ற ஊராட்சிகளை நகரத்தோடு இணைக்க வேண்டும் என்று சொன்னால், அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொறுப்பில் இருக்கின்ற காரணத்தால், அந்த பொறுப்பு காலம் முடிகின்ற வரை அதை இணைக்க முடியாது. பொறுப்பு காலம் முடிந்தவுடன் எந்தெந்த பகுதிகளை, நகரத்தோடு இணைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து இணைக்கலாம்.
கடந்த காலங்களில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போதே, இந்தந்த பகுதிகள் இணைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அப்படியிருக்கின்ற பகுதிகளுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதற்கு இப்போது இருந்தே மாநகராட்சியில் இருந்து பாதாள சாக்கடை திட்டமாக இருந்தாலும், கழிவறை வசதியாக இருந்தாலும், தெருவிளக்கு வசதியாக இருந்தாலும், சாலை வசதியாக இருந்தாலும் செய்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, உறுப்பினர் கேட்டதை போல அந்த 3 ஊராட்சிகளுக்கும் இப்போதே செய்ய முடியுமா? என்பது தெரிவில்லை. நீங்கள் சொல்கின்ற பணியை முதல்வரோடு கலந்து பேசி, நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு நிச்சயமாக அதையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post அயப்பாக்கம், அடையாளம்பட்டு, வானகரத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும்: பேரவையில் காரப்பாக்கம் கணபதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.