×

ராஜிவ் காந்தி சாலையில் புதிதாக அமைக்கப்படும் இந்திரா நகர் ‘யு’ வடிவ மேம்பாலம் மே மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்

சென்னை: ராஜிவ் காந்தி சாலையில் இந்திராநகர் ‘யு’ வடிவ மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மே மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என டிஎன்ஆர்டிசி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரதான சாலையாக இருக்கும் ராஜிவ் காந்தி சாலையில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த சாலையில் அமைந்துள்ளதால், தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன.

குறிப்பாக ராஜிவ் காந்தி சாலை மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 20 நிமிடம் வரை ஆகிறது. அதே நேரத்தில் பீக் அவர்சில் 30 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த பகுதியில் ஆய்வு நடத்தி, டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்தனர். அதன்படி ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ‘யு’ வடிவில் ரூ.108 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

நவம்பர் மாதத்தில் ரூ.108.13 கோடி நிதி ஒதுக்கீடுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் மழை வெள்ள பேரிடர்களால் மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎம்ஆர்டிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், சிறுசேரியில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள் உயரமான நிலையில் யூடர்ன் செய்ய முடியும். பின்னர் இந்திரா நகர் 2வது அவென்யூ மற்றும் அங்கிருந்து செல்லும் பிற சாலைகளைப் பயன்படுத்தி இலக்குகளை அடைய முடியும்.

சுமார் 250 மீட்டர்கள் கொண்ட மேம்பாலத்தின் பிரதான பகுதியை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. சரிவுகளை அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. மே 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டைடல் பார்க் சந்திப்பிற்கு அருகில் கட்டப்பட்டுள்ள 2வது மேம்பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். டைடல் பார்க் மற்றும் சிஎஸ்ஐஆர் சாலை சந்திப்புகளுக்கு இடையே வரும் இருவழிப்பாதை ஒரே திசை மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்கள் யூடர்ன் எடுக்க பயன்படுத்தபடும். டைடல் பார்க் மற்றும் இந்திராநகர் சிக்னல் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 13,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பணிகள் நிறைவடையும் போது டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சிக்னல்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் சீராக தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.

The post ராஜிவ் காந்தி சாலையில் புதிதாக அமைக்கப்படும் இந்திரா நகர் ‘யு’ வடிவ மேம்பாலம் மே மாதம் பயன்பாட்டிற்கு திறப்பு: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Indira Nagar ' ,U ,Rajiv Gandhi Road ,TNRTC ,Chennai ,Indiranagar ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...