×

திருநின்றவூரில் நூலகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஆவடி: நூலகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவடி அடுத்து திருநின்றவூர் பகுதியில் 18 சென்ட் நிலத்தில், முழுநேர கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1956ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலகத்தில் சுமார் 7,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 60,000 புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தை திருநின்றவூர், பாக்கம், ஆலந்தூர், நடுப்புத்தகை மற்றும் அரன்வாயில் சுற்றுவட்டார பகுதி மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக நூலகத்தின் இடம், தனி நபர்கள் ஆக்கிரமித்து பொது பாதையாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு பல புகார்கள் சென்ற நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றி நூலகத்தை சீரமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், நூலகத்தை புனரமைக்க இந்த வருடம் ஜனவரி மாதம் ரூ.21 லட்சம் ஒதுக்கி, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வேகமாக பணிகளை துவங்கி, மார்ச் மாதம் சுற்றுச்சுவர் அல்லாத மற்ற பணிகள் முடித்தனர். இந்நிலையில், நூலகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க முயன்றபோது, திருநின்றவூர் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட நூலக அலுவலர்கள் வாயிலாக, நூலக இடத்தை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் ஆவடி வட்டாட்சியர் ஆகியோர் நூலக நிலத்தை, அளவீடு செய்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினர்.

இது ஒருபுறம் இருக்க, நூலகத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கும் நிலையில், திருநின்றவூர் நகராட்சியின் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தோய்வடையும் நிலை உருவானது. நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சனையை ஆய்வு செய்த போது, சென்னை-திருத்தணி சாலையில் நகராட்சியின் பாதையை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள கடைகள் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, தங்கள் பாதையை மீட்டு தர கலெக்டருக்கு புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருநின்றவூரில் நூலகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruninnavur ,Avadi ,Aavadi ,Thiruninnavur ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...