×

2 விவசாயிகளை கொன்ற ‘கருப்பன்’ சிக்கியது: ஓராண்டாக பீதியில் இருந்த மக்கள் நிம்மதி

சத்தியமங்கலம்: தாளவாடியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டாக ஊருக்குள் புகுந்து 2 விவசாயிகளை மிதித்து கொன்றதோடு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது. கருப்பன் யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்கென பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 2 முறை கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து ஒரு முறை கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. எனினும் கருப்பன் யானை சிக்காமல் போக்கு காட்டியது. மூன்று முறை முயற்சி தோல்வி அடைந்த நிலையில் 4வது முறையாக கடந்த 15ம் தேதி இரவு பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு தாளவாடி அருகே மகாராஜன்புரம் பகுதியில் விவசாயி மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் கருப்பன் யானை நடமாடியதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று கரும்பு தோட்டத்தை சுற்றி வளைத்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பாதி மயக்க நிலைக்கு வந்து கரும்பு தோட்டத்தில் நகராமல் நின்றது. அப்போது கும்கி யானையும், கருப்பன் யானையும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.

பின்னர் கட்டுக்குள் வந்த கருப்பன் யானையை கும்கி யானை உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றது. லாரியில் ஏறாமல் அடம்பிடித்த கருப்பனை கும்கி யானை முட்டி தள்ளி 2 மணி நேரம் போராடி லாரியில் ஏற்றியது. பின்னர் அந்தியூர் கொண்டு செல்லப்பட்டு பர்கூர் மலைப்பகுதி கர்கேகண்டி வனப்பகுதியில் கருப்பன் யானை விடுவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக தாளவாடி மலை பகுதியில் விவசாயிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்த கருப்பன் யானை பிடிபட்டதால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post 2 விவசாயிகளை கொன்ற ‘கருப்பன்’ சிக்கியது: ஓராண்டாக பீதியில் இருந்த மக்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Thalavadi ,Erode ,Karuppan ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...